ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் போராட்டம்
கடலுார் : கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சவாரி மட்டுமே ஓட்ட வேண்டிய அபே ஆட்டோக்கள், விதிகளை மீறி இயக்கப்படுகிறது. இதனால் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விதிகளை மீறும், அபே ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலுார் மாநகர ஷேர் ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்கத்தின் கவுரவ தலைவர் குமார் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ராயர் ராஜாங்கம், பொருளாளர் ஆசைத்தம்பி உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டம் நடத்தியவர்களை ஆர்.டி.ஓ.,சுந்தர்ராஜன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'கடலுார் மாநகரில் அபே ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் விதிகளுக்கு உட்பட்டு இயக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகன ஆய்வாளர் தினசரி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஷேர் ஆட்டோ உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து டி.எஸ்.பி.,முன்னிலையில் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என' ஆர்.டி.ஓ., கூறினார். இதையேற்று ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் கலைந்து சென்றனர்.