உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சவுந்திரசோழபுரம் மேம்பாலம் பணி விரைந்து முடிக்க... கோரிக்கை; இரு மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சவுந்திரசோழபுரம் மேம்பாலம் பணி விரைந்து முடிக்க... கோரிக்கை; இரு மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக செம்மண் சாலையை பயன்படுத்தி, அரியலுார், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலுார், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.ஆண்டுதோறும் மழையின்போது, தொழுதுார் அணைக்கட்டு, ஆனைவாரி, உப்பு ஓடைகளில் இருந்து வரும் மழை நீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தற்காலிக செம்மண் சாலை அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்படும்.இதனால் இருமாவட்ட கிராம மக்களும் 15 கிலோ மீட்டர் சுற்றி வெளியூர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள், முதியோர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட இரு மாவட்ட கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.கடந்த 2018ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ. 10 கோடியே 86 லட்சத்து 485 மதிப்பில், புதிதாக மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.தற்போது, மேம்பாலம் பணிகள் முடிவடைந்த நிலையில், பாலத்தின் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலை பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அதற்கான பணிகள் மந்தமாக நடக்கிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழை மற்றும் 2 மாதங்களில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழைக்கு தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மீண்டும் போக்குவரத்து துண்டிக்க வாய்ப்புள்ளது.எனவே, பாலத்தின் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலைப் பணியை விரைந்து முடித்து, போக்குவரத்து வசதி ஏற்படுத்த கடலுார், அரியலுார் மாவட்ட அமைச்சர்கள், மக்கள் பிரிதிநிதிகள், கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 40 கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி