விருத்தாசலம் - திட்டக்குடி வழித்தட பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
பெண்ணாடம்: பள்ளி நேரங்களில் விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இறையூர், ஆவினங்குடி, கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் பஸ்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளி துவங்கும் போது காலை மற்றும் பள்ளி முடியும் மாலை வேளையில் மாணவர்கள் காத்திருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. அதில் ஓரிரு பஸ்கள் மட்டுமே நின்று செல்வதால் அனைத்து மாணவர்களும் அதில் முண்டியடித்து ஏறிச் செல்கின்றனர். பஸ்சில் இட பற்றாக்குறையால், மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, பள்ளி நேரங்களில் விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.