| ADDED : பிப் 03, 2024 08:37 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பழமையான கோவிலில் இருந்த விநாயகர் மற்றும் முருகர் சிலைகள் திருடி விட்டு, சிலுவை வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் சொக்கநாதர் கோவில் உள்ளது. கோவிலின் முன், மரத்தடியில் ஆவுடையார் சிவலிங்கம், விநாயகர், முருகர் சிலைகள் உள்ளன.இந்நிலையில், நேற்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றபோது, மரத்தடியில் இருந்த கருங்கல்லால் ஆன, 1 அடி உயர விநாயகர் மற்றும் முருகர் சிலைகளை காணவில்லை. ஆவுடையார் லிங்கம் அருகில் மரத்திலான சிலுவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா மற்றும் கிராம மக்கள் புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். சிலைகளை திருடிக் கொண்டு, சிலுவையை வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.