புதிய அரசு சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே, புதிதாக கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம், திறப்பு விழா காணாமல், பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேல்வளையமாதேவி ஊராட்சியில் 2024-25ம் ஆண்டிற்கான நெய்வேலி என்.எல்.சி., நிறுவன பொது சமுக பொறுப்புணர்வு நிதி 6 லட்சம் ரூபாயில், புதிய அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகி உள்ளது. ஆனாலும், இன்னும் இதற்கு திறப்பு விழா நடைபெறவில்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, தர்மநல்லுார், அம்மன்குப்பம், எறும்பூர் ஆகிய கிராம மக்களின் பயன்பாட்டிற்காக இந்த சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.