சி.என்.பாளையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான மின்திட்டம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி மின் தடையால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்த மின் விநியோக பிரச்னை உள்ளது.இதனால் சித்தரசூர் துணை மின்நிலையத்திலிருந்து ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய உயர்அழுத்த மின்பாதை அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.இந்த புதிய மின்அழுத்த இணைப்பில் காமாட்சிபேட்டை, நடுப்பேட்டை, கடைத்தெரு, பழையபாளையம், சொக்கநாதன் பேட்டை, புத்திரன்குப்பம், கச்சிராயன்குப்பம், மீனாட்சிபேட்டை தெரு, காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிக்காகவே இந்த புதிய இணைப்பு பணி துவங்கியது.தற்போது காமாட்சி பேட்டைக்கு மட்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கவில்லை.இந்த மின்பாதை செல்லும் வழியில் சாலையை ஒட்டி உள்ள புளியமரத்தின் கிளைகள் தடுப்பதால் மின் இணைப்பு வழங்கிட இயலவில்லை. இந்த புளியமரத்தின் கிளைகளை வெட்ட செல்லும் மின்துறை அதிகாரிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். இதனால் மின்சாரம் வழங்கிட முடியவில்லை என மின்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.மின்சாரம் வழங்காததால் ரூ.80 லட்சம் மதிப்பில் கொண்டு வரப்பட்ட மின் திட்டம் நிறைவு பெறாததால், 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இருளில் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.