மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?
சிறுபாக்கம்: மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, எள், வரகு பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நடப்பாண்டில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்ேடர் பரப்பளவில் மக்காச்சோளத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வழக்கமாக மக்காச்சோளத்தை புரோக்கர்கள் மூலம் வெளி மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் புரோக்கர் கமிஷன் மட்டுமல்லாது, வியாபாரிகளும்குறைந்த விலைக்கு மக்காச்சோளத்தை கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது இல்லை. இப்பகுதியில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைத்தால் விவசாயிகள் நேரடியாக வந்து விற்பனை செய்ய முடியும். இதனால், புரோக்கர்கள் தலையீடு இல்லாமல் விளைவித்த பயிருக்கு உரிய விலை விவசாயிகள் பெற்று பயனடைய முடியும். அதனால், சிறுபாக்கத்தில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.