உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் தி.மு.க., போட்டி வேட்பாளரால் பரபரப்பு :வீதிகளில் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரிப்பு

தர்மபுரியில் தி.மு.க., போட்டி வேட்பாளரால் பரபரப்பு :வீதிகளில் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரிப்பு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க., அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக தி.மு.க., நகரப் பொறுப்பாளர் சுயேட்சையாக களம் இறங்கியிருப்பது, அக்கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, போட்டி வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரிப்பு பணியை துவக்கி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.தர்மபுரி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதியும், தி.மு.க., சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர் கந்தசாமி, தே.மு.தி.க., சார்பில் டாக்டர் இளங்கோ, காங்கிரஸ் சார்பில் வக்கீல் மோகன், பா.ம.க., சார்பில் புனிதா, பாரதிய ஜனதா சார்பில் பிரபாகரன் உள்ளிட்ட, 13 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தல் விறுவிறுப்பான வேட்பு மனு தாக்கலின் போது, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் பலரும், சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவ்விரு கட்சியிலும், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கிவர்களுக்கு, கட்சி தலைமை கடும் எச்சரிக்கை விட்டது. அ.தி.மு.க.,வில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுமதிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்த நகர செயலாளர் குருசாமி, முன்னாள் நகர செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர், கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்று தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால், அ.தி.மு.க.,வில் நிலவிய அதிருப்திகள் மறைந்து, தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., தலைமை எச்சரிக்கையை மீறி, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கந்தசாமிக்கு எதிராக, தி.மு.க.,. நகர பொறுப்பாளர் சிட்டி முருகேசன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, நேற்று இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களுடன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திருப்பத்தூர் ரோட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரோடு சந்திப்பு அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து நேதாஜி பைபாஸ் சாலை வழியாக அரசு மருத்துவமனை முன் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வீதி, வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார். சுயேட்சையாக களம் இறங்கியுள்ள நகர செயலாளர் சிட்டி முருகேசனின் மகன் சுரேஷ், 11வது வார்டு கவுன்சிலர் பதிவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். இவர் நேற்று ஊர்வலம் துவக்கத்தின்போது, கலந்து கொண்டார். அதன் பின், அவர் அங்கு இல்லை. இந்த ஊர்வலத்தால், தி.மு.க.,வினர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால், ஊர்வலத்தில் எதிர்பார்த்த அளவில் தி.மு.க.,வினர் கலந்து கொள்ளவில்லை. சிட்டி முருகேசன் ஆதரவாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தால், முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தி.மு.க., தலைமை, 'அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக களம் இறங்கினால், கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்' என எச்சரித்த போதும், அதை மீறி தி.மு.க., நகர பொறுப்பாளர் சுயேட்சையாக களம் இறங்கி வீதிகளில் இறங்கி ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருப்பது, தர்மபுரியில் தி.மு.க.,வின் வெற்றியை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை