அரூர் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
அரூர், தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு ஜூலையில் ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை பாளையம்புதுாரில், நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது, மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டியை பஞ்சாயத்துக்களை இணைத்து, அரூர் டவுன் பஞ்., அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.தொடர்ந்து, கடந்த ஆக., 25ல், அரூர் டவுன் பஞ்.,ஐ நகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, தர்மபுரி நகராட்சி கமிஷனர் சேகர், அரூர் நகராட்சி கமிஷனராக (பொறுப்பு) பதவி வகித்து வந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த ஹேமலதா, அரூர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று அவர், அரூர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார். அரூர் நகராட்சியில் வருவாயை அதிகரிப்பதுடன், அரூர் நகரில் குப்பைகளை குறைக்கவும், மழைநீர் தேங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹேமலதா தெரிவித்தார். நகராட்சியின் முதல் கமிஷனரான ஹேமலதாவிற்கு, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்