ஒகேனக்கல் காவிரியாற்றில் 5வது நாளாக குளிக்க தடை
ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 50,000 கன அடியாக வந்து கொண்டிருப்பதால், குளிக்க, பரிசல் இயக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து, அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 43,000 கன அடியாக குறைந்து பின் மாலை, 5:00 மணிக்கு மீண்டும், 50,000 கன அடியானது. நீர்வரத்து அதிகரிப்பால், அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், 5வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தடையை நீட்டித்துள்ளது.