உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2வது மனைவியை கொன்று கணவன் தற்கொலை முயற்சி

2வது மனைவியை கொன்று கணவன் தற்கொலை முயற்சி

போச்சம்பள்ளி: இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார். தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டியை சேர்ந்தவர் சந்திரன், 62. இவரது மனைவி காளியம்மாள், 58. தம்பதிக்கு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள், 45, என்பவரை, சந்திரன் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கோவிந்தம்மாள், தன் தங்கை ராணி, 42. அவரது கணவரான லாரி டிரைவர் முனிராஜ், 46, ஆகியோரை, அடிக்கடி சந்திப்பதாகவும், மொபைல் போனில் பேசி வருவதாகவும் சந்திரனுக்கு தெரிய வந்தது. இதனால் மனைவி மீது சந்தேகம் வந்து, 'தங்கை, தங்கை கணவருடன் பேச வேண்டாம்; பழக வேண்டாம்' என, கூறியுள்ளார். ஆனால், கோவிந்தம்மாள் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், கோவிந்தம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று முன்தினம், கோவிந்தம்மாளை, கிருஷ்ணகிரி மாவட்டம், கறிவேப்பிலைகொட்டாய் பகுதிக்கு சந்திரன் அழைத்து வந்தார். அங்கு, தான் மறைத்து வைத்திருந்த நைலான் கயிற்றால், கோவிந்தம்மாளின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டு, தன் உறவினர்களுக்கு, சந்திரன் தகவல் தெரிவித்தார். உறவினர்கள், சந்திரனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாரூர் போலீசார் வழக்கு பதிந்து, கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை