ஊருக்குள் சிறுத்தைகள் உலா ஒலிபெருக்கியில் எச்சரிக்கை
பாலக்கோடு:ஊருக்குள் சிறுத்தைகள் சுற்றி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க, வனத்துறையினர்- ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதி வாழைத்தோட்டம் ஜோடிசுனை அருகே, மூன்று சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். சிறுத்தைகள் தினமும் அப்பகுதி வீடுகளில் நாய், கோழிகளை குறிவைத்து வேட்டையாடி வருகின்றன.கடந்த, 17ம் தேதி நள்ளிரவில், வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவரது வீட்டின் முன்பிருந்த நாயை, சிறுத்தை கவ்வி சென்ற, 'சிசிடிவி' காட்சி, பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது.ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க, அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, 'வாழைத்தோட்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள், வனப்பகுதிக்குள் செல்லவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவோ கூடாது. இரவில் வெளியே வர வேண்டாம்' என, பாலக்கோடு வனத்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.