| ADDED : நவ 29, 2025 01:07 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், 32. இவர், அரூர் திரு.வி.க., நகரில், 7 ஆண்டுகளாக சோல்ஜர்ஸ் ஜிம் மற்றும் பிட்னஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது ஜிம் சென்டருக்கு வந்த பெண் ஒருவரின் மகள், 16 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த அக்., 2ல் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு தோழியருடன் மாணவி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சிலம்பரசன் மாணவியை வீட்டில் விடுவதாக கூறி, அவரை காரில் அழைத்து சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லாமல் கடத்துார் செல்லும் சாலையில் சிறிது துாரம் சென்றவுடன் காரை நிறுத்திவிட்டு, மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.இந்நிலையில், மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை, தனது தாய் மொபைல்போனுக்கு வாய்ஸ் மெசேஜ் செய்துள்ளார். இது குறித்து, அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று சிலம்பரசனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிலம்பரசனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மனைவி இவரை பிரிந்து வாழ்கிறார். கடந்த வாரம் அரூர் டி.எஸ்.பி.,யாக சதீஸ்குமார் பொறுப்பேற்றார். பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பினர், அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சிலம்பரசன் கைது செய்யப்பட்டார்.