உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலாலயம் நடந்து முடிந்து 5 மாதமாகியும் திருப்பணிகள் துவக்கப்படாத வர்ணீஸ்வரர் கோவில்

பாலாலயம் நடந்து முடிந்து 5 மாதமாகியும் திருப்பணிகள் துவக்கப்படாத வர்ணீஸ்வரர் கோவில்

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், மிகவும் பழமையான வர்ணீஸ்வரர் கோவில், திருப்பணிக்கான பாலாலயம் நடந்து முடிந்து, 5 மாதமாகியும், கோவில் திருப்பணிகள் துவக்கப்படாமலேயே உள்ளது. திருப்பணிகளை விரைந்து துவங்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது:இலங்கை போரில், ராவணனை வதம் செய்து விட்டு வந்த ராமன், அயோத்திக்கு செல்லும் வழியில், இக்கோவில் அருகில் உள்ள வர்ணதீர்த்தம் என்ற குளத்தில் நீராடி விட்டு, தீர்த்தமலைக்கு சென்றதாக வரலாறு கூறுகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் முறையாக பராமரிக்கப்படாததால், கூரை மற்றும் பக்கவாட்டில் விரிசல்கள் ஏற்பட்டு மிகவும், சேதமடைந்த நிலையில் உள்ளது.மேலும், கோவில் அருகில் சாக்கடை நீர் தேங்கி உள்ளதுடன், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இதை கருத்தில் கொண்டும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்றும், இக்கோவிலில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு மேற்கொண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்தது. இதற்காக, வர்ணீஸ்வரர் கோவிலில், கடந்தாண்டு, செப்., 10ல் பாலாலயம் நடந்தது. ஆனால், பாலாலயம் நடந்து, 5 மாதங்களுக்கு மேலாகியும், சீரமைப்பு பணி இன்னும் துவக்கப்படவில்லை.மேலும், இக்கோவிலில் முழுமையாக சீரமைப்பு மேற்கொள்வதற்கு, 10 லட்சம் ரூபாய் என்பது போதுமானதாக இருக்காது. இக்கோவில் திருப்பணிக்கு, நிதி அளிக்க நன்கொடையாளர்கள் பலர் தயாராக உள்ளனர்.எனவே, கோவிலில், முழுமையாக திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக, அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், உடனடியாக திருப்பணிகளை, விரைந்து துவங்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை