திண்டுக்கல் : கொள்ளையில் ஈடுபடும் புது திருடர்கள், தடயங்களை அழிப்பதால், குற்றவாளிகளைப் பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் பழநி ஏ.கலையம்புத்தூர், தட்டான்குளம் புதுநகர் பகுதிகளில்கொள்ளைச் சம்பவங்கள் நடந்தது. வெளியூர் சென்றிருந்தவர்களின் வீட்டு பூட்டை உடைத்து, நகை, பணம் திருடிய நபர்கள், துணிகளையோ, லேப்டாப், பிற பொருட்களையோ எடுத்துச் செல்லவில்லை. கதவை உடைக்கப் பயன்படுத்திய கடப்பாறையை விட்டுச் சென்றிருந்தனர்.
மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தபோதும், எவ்வித தடயமும் சிக்கவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தற்போது பெரும்பாலும் கைரேகைகளை அழித்து விடுகின்றனர். பொருட்களை விட்டுச் சென்றாலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தந்திரமாக செயல்படுகின்றனர். திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோரில் பலர், 'புதிய வரவு'களாக உள்ளனர். எனவே சில இடங்களில் ரேகை பதிவுகள் கிடைத்தபோதும், குற்றவாளிகளை பிடிப்பதில் பலனளிப்பதில்லை. 35 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதல் மதிப்பிலான நகைகள் திருட்டு போகும் சூழலில், டி.ஐ.ஜி., வரையிலான உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டிய நிலை உருவாகும். இதனை தவிர்க்க, பல சம்பவங்களில் வழக்கு பதிவது தாமதப்படுத்தப்படுகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை அதிகமாக இருந்தபோதும், பத்தாயிரம் ரூபாயாக மட்டுமே கணக்கிடப்படுகிறது'' என்றார்.