| ADDED : மார் 22, 2024 05:24 AM
மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான நீர்நிலைகள், பரப்பளவு, பயன்பாட்டு அடிப்படையில் குளம், குட்டை, ஊருணிகளாக அமைந்துள்ளன. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவது மட்டுமின்றி அடிப்படை குடிநீர் ஆதாரமாகவும் இவை உள்ளன. பெரும்பாலானவற்றின் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு பராமரிப்பின்றி துார்ந்துள்ளன. இவற்றை பராமரிக்கும் அரசுத்துறை அமைப்புகளின் அலட்சியத்தால் மழை நீர் வந்தடைவதில் சிக்கல் நீடிக்கிறது.போதாக்குறைக்கு விவசாய பயன்பாடு என்ற பெயரில் கரிசல் மண் துவங்கி வண்டல் மண், சவுடு மண், செம்மண், மணல் போன்றவை முறைகேடாக மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் திருடப்பட்டு வருகிறது. வாகனங்களுக்கான போலி அனுமதி நடைச்சீட்டை பயன்படுத்தி நிர்ணயித்த அளவிற்கு பல மடங்கு கூடுதலாக மண் எடுக்கின்றனர். நீர்தேக்கங்கள் மட்டுமின்றி வரத்து கால்வாய்கள், கண்மாய் என அனைத்து நீர் நிலைகளிலும் இந்த அட்டூழியம் தாராளமாக நடக்கிறது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகளில் பாதாள குழிகளுடன் விபத்து அபாயமும் உள்ளன. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடி ஆழத்தை கடந்து சென்று விட்டது.இதை கருதி மாவட்ட நிர்வாகம் வருவாய், போலீஸ், கனிமவளத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மண் திருட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.