| ADDED : ஏப் 25, 2024 06:07 AM
திண்டுக்கல் ; திண்டுக்கல் மாகராட்சியில் மக்களுக்கு ரூ. 10 கட்டணத்தில் வழங்கப்படும் துணிப்பையில் ஒரு பக்கம் தனியார் விளம்பரம் ,மறு பக்கம் முன்னாள் ,இன்நாள் முதல்வர்கள் படம் இடம் பெற்றிருக்கும் நிலையில், மத்திய அரசின் ' மேக்துாத் கார்டு' பாதி விலையில் வழங்குவது போல் இதையும் பாதி விலையில் வழங்கலாமே என்ற கோரிக்கை அனைத்து தரப்பினரிடம் வலுத்துள்ளது.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பாலிதீன் ஒழிப்பு செயலில் மக்கள்நலனுக்காக மஞ்சள் துணிப்பை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவை பஸ் ஸ்டாண்ட உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள இயந்திரத்தில் ரூ. 10 நாணயத்தை செலுத்தினால் மஞ்சள் பை கிடைக்கிறது.இந்த பையின் முன்புறம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறமாக விளம்பரதாரர் பங்களிப்பாக பிரபல வணிக நிறுவனத்தின் பெயர் உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முன்பு வரை மஞ்சள் பை தானியங்கி இயந்திரம் செயல்பாட்டில் இருந்தது. தேர்தல் போது இயந்திரம் பழுதடைந்து விட்டதாக கூறி துணிப்பை விநியோகத்தை நிறுத்திவிட்டனர். அரசியல் தலைவர்களின் துதிகளுக்கு மக்களின் வரிப்பணத்திலான நலத்திட்டங்களை பயன்படுத்தினால் இத்தகைய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இனியாவது தனியார் விளம்பரங்களை தவிர்த்து அரசின் துதி பாடும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.பிரபல நிறுவனங்களின் வணிக விளம்பரங்கள் அந்த பொருளில் அச்சிடப்பட்டால் பயனாளர்களுக்கான செலவீன தொகையை பாதி விலையாக குறைக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலான போஸ்ட் ஆபிஸ்களில் போஸ்ட் கார்டு திட்டம் செயல்படுகிறது.இதற்கு 'மேக்துாத் கார்டு' உதாரணமாகும். இத்திட்டத்தின்கிழ் 50 பைசா பெறுமான போஸ்ட் கார்டில் தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை முன்புறம் பாதி பகுதியில் அச்சிட்டிருக்கும். இதனால் பயனாளர்களுக்கு 'மேக்துாத்' எனும் அந்த கார்டானது பாதி விலையான 25 பைசாவாக குறைக்கப்பட்டள்ளது. இதே நடைமுறையை தமிழக அரசும் மஞ்சப்பை திட்ட விற்பனையிலும் புகுத்தினால் பாலிதீன் பயன்பாடு முற்றிலும் குறைய வாய்ப்புகள் உருவாகும்.