கொடை யில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்; பயணிகள் அவதி
கொடைக்கானல்; கொடைக்கானலில் தொடர் விடுமுறையை அடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி, விஜயதசமி என தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை நகரில் முகாமிட்டனர்.பயணிகளின் வருகையால் நகர் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.வெள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து நகர் பகுதியை வந்தடைய 2 மணி நேரமானதால் பயணிகள் அவதியடைந்தனர். இங்குள்ள பிரையன்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலம், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போதுமான போலீசார் இருந்தபோதும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பயணிகள் நொந்து கொண்டனர்.