உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அம்மன்- கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

அம்மன்- கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

திண்டுக்கல்: ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆடி 2ம் வெள்ளி என்பதால் நேற்று அம்மன் கோயில்களில் கூட்டம் களைகட்டியது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு அம்மனுக்கு தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு உச்சி கால பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.அம்மனுக்கு கூழ் படைத்து தரிசனம் செய்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. நாகல்நகர் புவனேஸ்வரி அம்மன், நத்தம் ரோடு அஷ்டலட்சுமி, மலையடிவாரம் பத்திரகாளியம்மன், தெற்கு ரத வீதி அங்காள பரமேஸ்வரி, கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன், சமயபுரம் மாரியம்மன் என மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயிலகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீர், பால் அபிஷேகம் நடந்தது. வாலை திரிபுரை சக்திக்கு விசேஷ மலர் அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்த கூழ் தயாரிக்கப்பட்டது விசேஷ பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நத்தம்: மாரியம்மன் கோயிலில் 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது கம்பிளியம்பட்டி வரசித்தி வராகி அம்மன் கோயில், கோபால்பட்டி காளியம்மன் கோயில்,அசோக்நகர் பகவதி அம்மன், மீனாட்சிபுரம், காமராஜ்நகர் காளியம்மன்,ராக்காயி அம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை