சுத்தமில்லா குடிநீர் தொட்டி, துார்வாராத சாக்கடைகள் கலக்கத்தில் காந்திஜி நகர் குடியிருப்போர்
திண்டுக்கல்: சுத்தம் செய்யப்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி, துார்வாரப்படாத சாக்கடைகள், எரியாத விளக்குகள் என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் காந்திஜி நகர் குடியிருப்போர்.திண்டுக்கல் - காந்திஜி குடியிருப்போர் நலசங்க தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் சித்ரா முத்துக்குமார், செயலாளர் நாககுமார், பொருளாளர் ஜெயசித்ரா, இணைச்செயலர் பொன்னுசாமி, செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், சாந்தி, சுமதி கூறியதாவது : அனைத்து வரிகளையும் கட்டுகிறோம் ஆனால் ஊராட்சியிலிருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. நமக்குநாமே என்பது போல் பெரும்பாலான வசதிகளை நாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாகிறது. கொசுமருந்து என்பது அடிப்பதே கிடையாது. சில இடங்களில் ரோடுகள் மேடு பள்ளமாக இருப்பதால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. சாக்கடைகளை துார்வாருவதே கிடையாது. இதனால் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது.தற்போது சுத்தம் செய்வதே கிடையாது. பவுடரை பைப் வழியாக செலுத்துவதை மட்டுமே செய்கின்றனர். குறுக்குத் தெருக்களில் போதிய தெருவிளக்குகள் இல்லை. குறுக்கு தெரு, சந்து பகுதி காட்டு வழிப்பாதை போல் ஓரங்களில் புற்கள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. பூச்சிகள் சில நேரங்களில் வீடுகளுக்கு வருவதே தெரியவில்லை. போலீசார் ரோந்து பணிகளை இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டும். எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாலே போதும் என்றனர்.