அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு பணம் வீணடிப்பு; கண்காணிப்பு இல்லையே
ஆத்துார்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் அலட்சிய அதிகாரிகளால் நலத்திட்ட நிதியை வீணாக்கும் அவலம் தொடர்கிறது. தரமற்ற தளவாட பொருட்களால் பயனாளிகளிடம் அரசு திட்டங்கள் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன.மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீடு மூலம் பல்வேறு திட்டங்களில் மக்களுக்கான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர், தெருவிளக்கு, ரோடு, சாக்கடை போன்ற வசதிகள் மட்டுமின்றி, நீர்நிலை மேம்பாடு, எதிர்கால தேவைக்கான திட்டங்களுக்கும் இவற்றில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மூலமும், 305 ஊராட்சிகளில் மாவட்ட கவுன்சில், ஒன்றிய கவுன்சில், கிராம ஊராட்சி என 3 அடுக்கு நிர்வாகங்கள் மூலமும் திட்டங்களுக்கான ஒதுக்கீடு உள்ளது. சில திட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தளவாட பொருட்களை சரிவர பராமரிப்பதில்லை. திறந்தவெளியில் குவித்து வைத்துள்ளனர், மழை, வெயிலின் தாக்கத்தால் துரு பிடித்து சேதமடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கோ, பணிக்கோ வினியோகிக்கப்படுகிறது.இதையடுத்து தரம் குறைந்த கட்டமைப்புகள், அரசு திட்டங்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்துபவையாக மாறி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைகள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு அபராதம்
கிராம, நகர்ப்புற பாகுபாடின்றி அடிப்படை வசதிகள், நீராதார மேம்பாடு, வடிகால் பணிகள் போன்றவற்றின் மூலம் வளப்படுத்த அரசு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை தகுதி உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளும் நிலை வெகுவாக மாறிவிட்டது. ஆளுங்கட்சியினரும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பினாமி பெயர்களில் ஒப்பந்ததாரர்களாக மாறி திட்ட பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். பொறியியல் பிரிவுகளில் கமிஷன் மட்டுமே எதிர்பார்ப்பாகக் கொண்டு திட்டப் பணி ஒதுக்கீடு நடக்கிறது. அரசு வழங்கும் தளவாட பொருட்களையும் தரமாக வழங்குவதில்லை. கண்காணிப்பதிலும் செயல்படுத்துவதிலும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொறியியல் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். பெயரளவு பணிகளால் அரசு பணம் வீணாக்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான நடவடிக்கை தேவை. லட்சுமண மணிகண்டன் ,பா.ஜ., வடக்கு ஒன்றிய பிரதிநிதி . ஆத்துார் .