உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண்மாயில் கழிவுகள்; குடிநீர் வழங்கலில் அலட்சியம் டி.புதுப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்

கண்மாயில் கழிவுகள்; குடிநீர் வழங்கலில் அலட்சியம் டி.புதுப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்

கன்னிவாடி: ரோடு, கண்மாய்களில் கழிவுகள் குவிப்பு, ஆக்கிரமிப்புகளால் துார்ந்த வரத்து வாய்க்கால், தெருக்களில் தேங்கும் அசுத்த நீர், குடிநீர் வினியோகத்தில் குளறுபடி போன்ற பிரச்னைகளால் டி.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். காப்பிளியபட்டி, டி.புதுப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி உட்பட 10க்கு மேற்பட்ட கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் விஸ்தரிப்பு பகுதிகளை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் போதிய அடிப்படை வசதிகளின்றி இப்பகுதியில் வசிப்போர் தவிக்கின்றனர். சில கிராமங்களில் குண்டும் குழியுமான தெருக்களில் போக்குவரத்து வசதிக்காக அவதிப்பட்டு வருகின்றனர். பல மாதங்களாகியும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி முழுமை பெறவில்லை. பெரும்பாலான வார்டுகளில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. தெருக்களில் அசுத்த நீர் தேங்குகிறது. இவற்றின் மீதுள்ள குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக் கின்றனர். தண்ணீர் வழங்கலில் நிலவும் அலட்சியம், குளறுபடிகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சுகாதாரம் சார்ந்த அடிப்படை பிரச்னைகள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளன. குடியிருப்புகளை சூழ்ந்து மழை, சாக்கடை நீர் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிப்பால் பலர் பாதிப்படைந்து உள்ளனர். அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை மனு அளிப்பது வாடிக்கையாகிவிட்டது. பல ஆண்டுகளான போதும் இவற்றின் மீதான நடவடிக்கையில் தொய்வு நிலவுகிறது. இப்பகுதியில் வசிப்போர், அடிப்படை வசதிகளுக்காக அவதிக்குள்ளாகும் அவல நிலை நீடித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மீட்பு நடவடிக்கை தேவை தினகரன், ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர், டி.புதுப்பட்டி: வீடு தோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் சரிவர செயல்பாட்டில் இல்லை. நீராதாரங்களை பாதுகாக்க அரசு மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவுகளும் அவ்வப்போது பிறப்பிக்கப்படுகிறது. பொதுப்பணி, வளர்ச்சி துறை அதிகாரிகளோ உள்ளாட்சி அமைப்புகளோ இவற்றை கண்டுகொள்வதில்லை. டி.புதுப்பட்டி கண்மாயில் ஊராட்சி நிர்வாகமே கழிவுகளை குவிக்கிறது. சுற்றிய கண்மாய்களில் வண்டல், சுக்கா மண் வளத்தை சமூக விரோதிகள் திருடி செல்கின்றனர். பெருமளவு விவசாய நிலமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஊராட்சியின் அனைத்து கிராமங்களிலும் சுகாதார நடவடிக்கைகள் பெயரளவில் கூட இல்லை. குடிநீர் வழங்கலில் நிர்வாக அலட்சியத்தால் குளறுபடிகள் தொடர்கிறது. --தண்ணீர் பிரச்னை சென்றாயப்பெருமாள், விவசாயி, சிறுநாயக்கன்பட்டி: சிறுநாயக்கன்பட்டியில் 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.. இங்கு இருந்த சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி சில மாதங்களுக்கு முன் புதிய தொட்டி கட்டப்பட்டது. தற்போது வரை முழுமையான பராமரிப்பு துவங்கவில்லை. கட்டப்பட்ட சில நாட்களில் குழாய்களில் கசிவு அதிகரித்து பாசி படர்ந்துள்ளது. தரைப்பகுதி சேதமடைந்துள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இங்குள்ள கண்மாய் 80 ஏக்கரில் 3 மதகுகள், 8 சதுர கிலோ மீட்டர் நீர் பிடிப்பு பகுதியாக கொண்டுள்ளது. கழிவு மேலாண்மையில் அலட்சியம் வேலுச்சாமி, கூலித் தொழிலாளி, காப்பிளியபட்டி: காப்பிளியபட்டி கிராமத்தில் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளின்றி சுகாதாரக்கேடான சூழலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். குழாய் உடைப்பை காரணம் கூறி 4 வாரங்களாக தண்ணீர் வினியோகம் இல்லை. குடியிருப்புகளை சூழ்ந்து மழை, சாக்கடை நீர் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. திடக்கழிவு மேலாண்மை பணியை ஊராட்சி நிர்வாகம் முழுமையாக கண்டு கொள்வதில்லை. கண்ட இடங்களில் குப்பையை குவித்து எரிக்கின்றனர். இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கொசுத்தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். கன்னிவாடி செல்லும் ரோடு சீரமைப்பு பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடப்பதால் அவசர காலங்களில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை