| ADDED : நவ 22, 2025 12:19 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகம் தான் தயாரித்த பஞ்சாமிர்தத்தை நவ., 20 ஒரே நாளில் 2,65,940 பெட் ஜார்கள் விற்பனை செய்து சாதனை படைத்தது. இக்கோயில் நிர்வாகம் சார்பில் வாழைப்பழம், நாட்டுசக்கரை, பேரிச்சம்பழம், ஏலக்காய், தேன், கற்கண்டு, நெய் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழநி கோயில் பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்றது. 2019 ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் இதற்காக தயாரிப்பு மையம் செயல்படுகிறது. இங்கு சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு டின், பெட் ஜார்களில் விற்கப்படுகிறது. 470 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம் டின் ரூ.45, பெட் ஜார் ரூ.40, 200 கிராம் பெட் ஜார் ரூ. 20 விலையில் விற்கப்படுகிறது. இந்தாண்டு கோயில் நிர்வாகம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் வருகையை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் பஞ்சாமிர்த விற்பனையை அதிகப்படுத்தியது. இதற்காக 15 நிரந்தர விற்பனை மையங்கள், ஒரு தற்காலிக மையம் அமைக்கப்பட்டது. கார்த்திகை முதல் தேதி முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடக்கிறது. நவ., 19ல் 1,98,480 ஜார்கள் விற்பனையான நிலையில் நவ., 20 ஒரு நாளில் மட்டும் 2,65, 940 ஜார்கள் விற்பனையாயின. இதுவரை நடந்த விற்பனையில் அதிக அளவு விற்பனை இதுவே ஆகும்.