பி.எஸ்.என்.எல்., டவருக்கு மாலை அணிவித்து போராட்டம்
தாண்டிக்குடி: - தாண்டிக்குடி மங்களம்கொம்பில் பி.எஸ்.என்.எல்., டவருக்கு மாலை அணிவித்து நுாதன போராட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஈடுபட்டனர்.மங்களம்கொம்பில் பி.எஸ்.என்.எல்., டவர் உள்ளது. இதன் மூலம் இங்குள்ள 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு அலைபேசி சேவையளிக்கப்படுகிறது. தொடர்ந்து தொழில்நுட்ப பாதிப்பு, மின்தடையால் சேவை துண்டிப்பு என பல மாதங்களாக வாடிக்கையாளர்கள் அவதிப்படும் நிலை உள்ளது. புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கையில்லாத நிலை நீடிக்கிறது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் பி.எஸ் என்.எல்.,அலைபேசி டவருக்கு மாலை அணிவித்தும், தீபாராதனை காட்டி அலைபேசிகளுடன் ஒப்பாரி வைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.