UPDATED : டிச 08, 2025 06:32 AM | ADDED : டிச 08, 2025 06:16 AM
மனித நாகரிக வளர்ச்சியில் தற்போது மக்காத குப்பைகளின் ஆதிக்கம் பூமியை பாழ்படுத்தும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தெருவிலும், குப்பை தொட்டிகளிலும் வீசப்படும் பொருட்களை முறைப்படி மறுசுழற்சிக்கும், மக்க வைக்க நடவடிக்கை எடுக்காமல் பல இடங்களில் தீயிட்டு கொளுத்தப்படும் அவலமும் நடக்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் மனிதருக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படுகிறது. பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பணியாளர்களை அமர்த்தி மக்கும் பொருட்களை துண்டு, துண்டாக வெட்டி அதற்குரிய தொட்டியில் சானம், நுண்ணுயிர் கரைசல் கலந்து பல நாட்கள் வைத்து பின்னர் ஜல்லடையில் சலித்து மண் புழுக்கள் இருக்கும் தொட்டியில் சேர்த்து உரமாக மாற்றுகின்றனர். இதுபோலவே திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்தும் முறை பரவலாக இருக்கவே செய்கிறது. இதை ஒழிக்க கடந்த சில ஆண்டுகளில் அரசு சார்பில் வீடுகளில் தனிநபர், பொது இடங்களில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைத்து திறந்தவெளி கழிப்பிட முறையை ஒழிக்க அரசு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இதன் பலனாக இன்றளவில் பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சில ஆண்டுகளில் கழிவறை தொட்டி நிரப்பிவிடும்போது தனியார் வாகனங்களை அழைத்து பணம் தந்து அகற்றுகின்றனர். ஆனால் இந்த செப்டிங் டேங்க் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே மறைவான ரோட்டோரம், நீர்நிலையில் இவற்றை திறந்துவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும், துர்நாற்றத்தால் மக்களுக்கு அவதியும் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்தி அரசு சார்பில் சேகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தி உரமாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.