| ADDED : ஜூலை 15, 2011 12:36 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், வக்கீல்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், தமிழகத்தில் ஒரு கோடி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை அ.தி.மு.க., அரசு சீர்குலைத்துள்ளது. எனவே, சமச்சீர் கல்வி திட்டத்தை இந்தாண்டு முதலே அமல்படுத்த வேண்டும். புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் ஆகியவற்றை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும். அ.தி.மு.க., அரசால் பழிவாங்கும் நோக்குடன் தி.மு.க.,வினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்ள, தி.மு.க., வக்கீல்கள் முன்வரவேண்டும். இலங்கையில் கம்பி வேலிக்குள் வாழும் அப்பாவித் தமிழர்களின் வாழ்வுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அலுவலகத்தில் வைத்திருக்கும் தி.மு.க., தலைவர்கள் படங்களை அப்புறப்படுத்தி வரும் அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவையில் ஜூலை 23ம் தேதி நடக்க உள்ள மண்டல வக்கீல்கள் கூட்டத்துக்கு தி.மு.க., வக்கீல்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாவட்ட தி.மு.க., வக்கீல் அணி அமைப்பாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். பழனிக்குமார், ராஜா, சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜா, மேயர் குமார்முருகேஸ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.