சமுதாய கூடத்தில் பூத் அமைக்கலாமா? யோசனை தெரிவிக்க அழைப்பு
ஈரோடு, ஆக. 30-ஈரோடு மாவட்டத்தில், 2,222 ஓட்டுச்சாவடிகள் பட்டியலை வெளியிட்டு, சமுதாய கூடம், அதிக குடியிருப்பு பகுதியில் புதிய ஓட்டுச்சாவடி அமைக்க, யோசனை தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தை முன்னிட்டு, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதியில், 19 லட்சத்து, 66,496 வாக்காளர்கள் உள்ளனர். 956 இடங்களில், 2,222 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் புது ஓட்டுச்சாவடிகளை உருவாக்குதல், இடம் மாற்றம் செய்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்பட உள்ளது.ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகபட்சம், 1,500 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதலானால், புதிய ஓட்டுச்சாவடி அமைக்கப்படும். கடந்த தேர்தலுக்கு பின் பல பழைய கட்டடங்களில் அறைகள் இடிக்கப்பட்டு, புதுப்பிக்கப்படுகிறது. அவ்வாறான ஓட்டுச்சாவடி அறைக்கு பதில் அதே கட்டடத்தில் அல்லது அருகாமையில் புதிய ஓட்டுச்சாவடியை ஏற்படுத்த வேண்டும்.தவிர சில அப்பார்ட்மென்ட், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, புதிய நகர் என உருவாகி, 300 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், அக்கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கு, சமுதாய கூடத்தில் புதிய ஓட்டுச்சாவடி அமைக்கலாம்.உதாரணமாக நல்லகவுண்டன்பாளையத்தில், 3,000 வீடுகள் வருகிறது. அங்கு முழு குடியிருப்பு அமையவில்லை. ஆனால் மைலம்பாடியில், 600, 700 வீடுகளுக்கு ஆட்கள் வந்ததால், அதுபோன்ற இடத்தில் புதிய ஓட்டுச்சாவடி அமைக்கலாம். சத்தியமங்கலம் ராஜன் நகர், ரோஜா நகரில் அதிக குடியிருப்புகள் உள்ளதால், அதையும் பரிசீலிக்கலாம். இவ்வாறு கூறினார்.