ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் சூறாவளி காற்றால், கோபி, அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமாகின.ஈரோடு
மாவட்டத்தில் பல வாரங்களாக கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், ஒரு
வாரமாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை
மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று, மழை பதிவானது. 30
முதல், 45 நிமிடங்கள் மட்டுமே பெய்த கனமழையைவிட, 1 மணி நேரத்துக்கு
மேல் நீடித்து பலத்த காற்றால் பயிர் மற்றும் மின்சாரமும் அதிகமாக
பாதித்தது.கோபி மொடச்சூர், அந்தியூர் பகுதியில் காட்டூர்,
அம்மாபேட்டை, ஈரோடு, கவுந்தப்பாடி உட்பட பல பகுதியில் வாழை,
கரும்பு, தென்னை மரங்கள் உட்பட பல்வேறு மரங்களும் கடுமையாக பாதித்தன.
வாழை மரம் சாய்ந்து, மீண்டும் சீரமைக்க முடியாத நிலைக்கு மோசமாக
பாதித்தது. கரும்பு பயிர்கள் ஒடிந்தும், அளவுக்கு அதிகமாக சாய்ந்தும்,
மடிந்தும் போனதால், விவசாயிகள் பெரிதளவில் பாதித்துள்ளனர்.தென்னை
மரங்களில் மட்டை, இலை உதிர்ந்தும், மரங்கள் சாய்ந்தும், தோப்பு பகுதி
முழுவதும் குப்பையாக வீசி சென்றதால், விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர்.ஈரோடு-நசியனுார் சாலை, முருகேசன் நகர்,
வாய்க்கால் சாலை, வீரப்பன்சத்திரம் உட்பட பல இடங்களில் மின்
கம்பங்கள் மீது மரக்கிளை, தென்னை ஓலை விழுந்து மின்தடை ஏற்பட்டது.
நேற்று காலை முதல், ஈரோடு மாநகர பகுதியில் மின் கம்பங்களை ஒட்டிய
மரங்கள், கிளைகளை அகற்றி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளைக்கு இப்பணி
தொடரும் என மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.