உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச வேட்டி, சேலைக்கான நுால் நேரடி கொள்முதல் விசாரணை மேற்கொள்ள கைத்தறி ஆணையர் உத்தரவு

இலவச வேட்டி, சேலைக்கான நுால் நேரடி கொள்முதல் விசாரணை மேற்கொள்ள கைத்தறி ஆணையர் உத்தரவு

ஈரோடு:கடந்த பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு வெளிச்சந்தையில் நுால் கொள்முதல் செய்தது தொடர்பாக விசாரணை செய்ய, கைத்தறி ஆணையர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார்.உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகை-2024க்காக இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் இலக்கை எட்ட விசைத்தறி வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான '40ஸ் கிரே பருத்தி கோன் நுால்' அரசு கூட்டுறவு நுாற்பாலைகளுக்கு வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மீதி தேவைக்கான நுால், வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.அந்நுால் ரகம், 'யான் குடோன்' வழியாக பெற்று, அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் சோதனை செய்து, உரிய தரச்சான்று பெற்று உற்பத்தியில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.இவ்வழிகாட்டுதல், அறிவுரைகளை மீறி, ஈரோடு சரகத்துக்கு உட்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், நுால் கொள்முதல் செய்யும் நேர்வில், நுால் கிடங்குகளின் வாயிலாக இல்லாமல், நேரடியாக கொள்முதல் செய்தது தெரியவந்தது.கொள்முதல் இன்வாய்ஸ் படிவத்தில், நுால் குடோன் வழியாக தருவிக்காதது ஊர்ஜிதமாகிறது. இவை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய, அலுவலக பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொள்ள திருப்பூர் உதவி அமலாக்க அலுவலக உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல் கணேசன், நியமிக்கப்பட்டுள்ளார். பிற நிர்ணயங்களை விசாரிக்க காஞ்சிபுரம் சரக உதவி இயக்குனர் செந்தில்குமார் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை அறிக்கையை, ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி