உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணை நீர்த்தேக்க பகுதியில் 6 ஆண்டுகளுக்கு பின் தெரியும் கோவில்

அணை நீர்த்தேக்க பகுதியில் 6 ஆண்டுகளுக்கு பின் தெரியும் கோவில்

பவானிசாகர்:தமிழகத்தில் டெல்டா பாசனத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பு, தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண்அணை என்ற பெருமையை பெற்றது பவானிசாகர் அணை. அணை முழு நீர்தேக்க பரப்பு, 30 சதுர மைல். அணையின் மொத்த உயரம், 105 அடி. அணையில், 32.8 டி.எம்.சி., வரை நீர் தேக்கலாம்.பவானி ஆறு, மாயாறு ஒன்று சேருமிடத்தில், 1948ல் பவானிசாகர் அணை கட்டுமானப்பணி தொடங்கியது. நீர்த்தேக்க பகுதியில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த டணாய்க்கன் கோட்டையில் உள்ள மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில், அப்பகுதி மக்களின் வழிபாட்டு தலமாக திகழ்ந்தது. கட்டுமானப்பணி துவங்கியபோது, நீர்த்தேக்க பகுதியில் வசித்த கிராம மக்கள் பவானிசாகர், ராஜன் நகர், புதுக்குய்யனுார், பண்ணாரி சுற்று வட்டாரத்தில் குடியேறினர். அணைக்குள் இருந்த பழமை வாய்ந்த சிலைகள் எடுத்து வரப்பட்டு பவானிசாகர், கீழ்பவானி வாய்க்கால் கரையோரம்,கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1955ல் கட்டுமான பணி முடிந்தபின், கற்களால் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபங்கள் அணை நீரில் மூழ்கி சிதிலமடைந்தன. அணை நீர்மட்டம், 48 அடியாக குறையும்போது, டணாய்க்கன் கோட்டை, மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும். கடைசியாக, 2018ல் நீர்மட்டம் சரிந்தபோது கோவில்கள் வெளியே தெரிந்தன. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் நீர்மட்டம் குறையாததால் வெளியே தெரியவில்லை. தற்போது அணை நீர்மட்டம், 47.60 அடியாக சரிந்துள்ளதால், மாதவராய பெருமாள் கோவில் முழுவதும் காட்சியளிக்கிறது.இதுகுறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அணை நீர்மட்டம், 47.60 அடியாக சரிந்துள்ளதால் மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. நீர்மட்டம், 35 அடியாக குறையும் பட்சத்தில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் மற்றும் பீரங்கித்திட்டு பகுதி தெரியும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ