| ADDED : ஆக 08, 2011 03:27 AM
ஈரோடு: ''ஆசிரியர்கள் நல்ல கல்வி வழங்கினால் மட்டுமே மாணவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்'' என, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார். ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் நேற்று 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. பாரதியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுவாமிநாதன் பட்டங்களை வழங்கினார். 5 தங்க மெடல், 44 பல்கலைக்கழக ரேங்க் சான்றிதழ் மற்றும் 736 மாணவர்களுக்கு பட்டமளித்து அவர் பேசியதாவது: ஆசிரியர்கள் பாடம் நடத்துவது மட்டும் கடமையல்ல. மாணவர்கள் திறமையை கண்டறிந்து அந்த திறமையை மேலும் அதிகப்படுத்தும் வகையில், வழிகாட்டியாக இருக்க வேண்டும். அந்த திறமை இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். மாணவர்கள் மத்தியில் திறமை அதிகம் பயனுடையதாகும். சொந்த முயற்சியால் அவர்களும் முன்னுக்கு வர ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். அப்போது தான் நல்ல எதிர்காலம் உருவாகும். எதிர்காலம் என்பது சவாலானது. நல்ல கல்வி வழங்கினால் மட்டுமே மாணவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். நல்ல கல்வியை போதிக்க ஆசிரியர்களின் கடமை. இந்தியாவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்கள் திறமை, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு இளைஞர்கள் பங்கு அதிகமுண்டு. வளர்ச்சி என்பது ஒரு முறை வந்தால் மட்டும் போதாது. தொடர்ந்து வளர்ச்சி இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கொங்கு வேளாளர் கல்வி நிறுவனத் தலைவர் முருகேசன், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் பழனிச்சாமி, கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் வெங்கடாசலம், முதல்வர் ராமன் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.