ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள கடைகளில், நேற்று உணவு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்ட பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானம், உணவுப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. மாவட்ட கலெக்டர் காமராஜ் உத்தரவின் பேரில், நேற்று, இக்கடைகளில் மாநகராட்சி கமிஷனர் பாலசந்திரன், உணவு ஆய்வாளர் கொண்டல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் 15 பேர் கொண்ட குழு, ஆய்வு நடத்தியது.
இதில், 40 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்களில், பாக் செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், காலாவதி பொருட்கள், தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானம், வாட்டர் பாக்கெட், தின்பண்டங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 44 கடைகளில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நொறுக்கு தீனி, குளிர்பானம், வாட்டர் பாக்கெட் உள்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன. அடுத்த வாரமும் ஆய்வு தொடரும் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.