உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அத்தாணி டவுன் பஞ்., அ.தி.மு.க.,வில் கோஷ்டிபூசல்: பகிரங்கமாக எதிரணிக்கு ஓட்டு வேட்டை

அத்தாணி டவுன் பஞ்., அ.தி.மு.க.,வில் கோஷ்டிபூசல்: பகிரங்கமாக எதிரணிக்கு ஓட்டு வேட்டை

அந்தியூர்: அத்தாணி டவுன் பஞ்சாயத்து அ.தி.மு.க.,வில் 'பகிரங்கமான' கோஷ்டி பூசல் உருவாகியுள்ளது.அந்தியூர் அருகே, அத்தாணி டவுன் பஞ்சாயத்து அ.தி.மு.க., வேட்பாளராக திருமுருகன் களம் இறக்கப்பட்டுள்ளார். அத்தாணி நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் 'சீட்' கேட்டு விருப்ப மனு அளித்தும், திருமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ராஜா கோஷ்டியினர் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பதற்காக, திருமுருகன் பற்றிய தகவல்களை மேலிடத்துக்கு ஃபேக்ஸ் செய்த ராஜா கோஷ்டிக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.பஞ்., தலைவர் பதவி கனவு 'தவிடு' பொடியாகிவிட்டதால், 15 வார்டுகளில் சிலவற்றை, தங்கள் ஆதரவாளருக்கு ஒதுக்க வேண்டும் என ராஜா தரப்பு கோரிக்கை வைத்தது. இதையேற்று கொண்ட தலைமை, 2, 6, 8, 9, 13 ஆகிய ஐந்து வார்டுகளை ராஜா தரப்பினர் போட்டியிட அனுமதியளித்தது.ராஜா கோஷ்டிக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து வார்டுகளில், வார்டு கவுன்சிலருக்கு அ.தி.மு.க.,வுக்கும், தலைவர் பதவிக்கு பகிரங்கமாகவே, தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிக்கும், ராஜா தரப்பின் ஓட்டு கேட்பதாக, திருமுருகன் கோஷ்டியினர் புகார் கூறுகின்றனர். கட்சிக்கு புதியவரான திருமுருகனை 'தலையெடுக்க' விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, மற்ற வார்டுகளிலும் ராஜாவின் 'விசுவாசி'கள் கவுன்சிலர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குற்றச்சாட்டு. இந்த கவுன்சிலர்களால் அ.தி.மு.க., ஓட்டுக்கள் சரியும் எனவும் கட்சியினர் கூறுகின்றனர்.எதிர் துருவமாக செயல்படும் இருவருக்குள் நடக்கும் பிரச்னையால், அத்தாணி டவுன் பஞ்சாயத்து 'யாருக்கு' என்பதை காண, பொதுமக்கள் ஆவலுடன் காத்தக் கொண்டுள்ளனர்.'சீட்' கிடைக்காத அதிருப்தியாளர்கள் செய்யும் 'உள்குத்து' வேலை சகஜம்தான் எனினும், அ.தி.மு.க.,வா; தி.மு.க.,வா? என்ற நிலை மாறி, அத்தாணி அ.தி.மு.க.,வில் யாருக்கு பலம் என்ற நிலை உருவாகியுள்ளது.ராஜா கோஷ்டியின் 'உள் குத்து' உச்சகட்டத்தை அடைந்தாலும், இதை முறியடிக்கும் பணிகளை திணறலுடன் வேட்பாளர் கோஷ்டியினர் எதிர் கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி