| ADDED : பிப் 13, 2024 12:01 PM
ஈரோடு: தாளவாடி மலை பி.டி.ஓ., அலுவலகம் பின்புறம் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் மனைவி அனு பல்லவி, 25; தாயாருடன் வந்து, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிரதீப்குமார், ஓட்டுனராக பணி செய்கிறார். எனக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. தாளவாடி அரசு மருத்துவமனையில், கடந்த, 2022, பிப்., 22ல் குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் முகாம் நடந்தது. அதில் நான் உட்பட எட்டு பேர் பங்கேற்றோம். ஒரு வாரம் கழிந்து ஆப்பரேஷன் நடந்த நிலையில், என்னை தவிர மற்றவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். எனக்கு சுயநினைவு திரும்பாததுடன், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, 25 நாட்கள் ஐ.சி.யூ.,வில் இருந்த பிறகே, நினைவு வந்தது.தாளவாடியில் அறுவை சிகிச்சை செய்தபோது, இதயத்துக்கு செல்லும் அயோட்டா என்ற ஒரு ரத்தக்குழாயை துண்டித்ததாகவும், அதை சரி செய்ய இயலாது என்றும், உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்தனர். ஓராண்டாக எனது தாயார் வீட்டில் வசிக்கிறேன். என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. எனக்கு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்படியான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.மனுவை பெற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) அலுவலகத்தினர் மற்றும் டாக்டர்களை வரவழைத்து விசாரிக்க உத்தரவிட்டார். உடனடியாக சில டாக்டர்கள் வந்து, அனுபல்லவியிடம் விசாரித்தனர். தொடர் ஆலோசனை வழங்குவதாக உறுதியளித்தனர்.