கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் பராமரிப்பு பணி நிறைவு
ஈரோடு, ஈரோடு, காளை மாட்டு சிலை அருகேயுள்ள கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில், தாழ்வான பகுதியில் உள்ள ஒரு பகுதி சாலையில் மழை, சாக்கடை நீர் தேங்கும்போது அவற்றை முறையாக, முழுமையாக வெளியேற்ற வசதியில்லை. அதிகமாக தண்ணீர் தேங்கினால், மோட்டார் வைத்து நீரை வெளியேற்றுவர். கடந்த, 10 நாட்களுக்கு முன் வாகனத்தின் எடை தாங்காமல் நுழைவு பால தரைத்தள கம்பிகள் சேதமடைந்து, மழை நீர், சாக்கடை நீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காளை மாட்டு சிலையில் இருந்து மட்டும் செல்லும் வகையில் ஒரு புறத்தை மட்டும் தயார் செய்து இயக்கினர். மறுபுறத்தில் பராமரிப்பு பணி நடந்தது. வேலை முடிந்த நிலையில் நேற்று இரு புறமும் வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.இதுபற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போது மழை நீர், சாக்கடை நீர் வெளியே சிறிய அளவில் வசதி செய்துள்ளோம். வாகனங்களால் பழுது ஏற்படாத வகையில் கம்பிகளை சீரமைத்துள்ளோம். விரைவில் உயர் மட்டப்பாலம் அமையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.