| ADDED : மே 03, 2024 06:45 AM
கோபி : இந்திய கம்யூ., கட்சி சார்பில் கோபியில் கட்டப்படும் அரங்கத்தை, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பார்வையிட்டார்.அப்போது அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், இண்டியா கூட்டணி, 40 தொகுதியிலும் தமிழகத்தில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்ட ஒன்று. பத்தாண்டு காலமாக ஆட்சி செய்த பிரதமர் மோடி, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதை மூடி மறைக்க வேண்டி வேறு மாதிரியான பிரசாரம் மேற்கொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் குவாரி விபத்தில் பலியான மூவரின் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சத்தியமங்கலத்தில் நடந்த விபத்தில் பலியானோருக்கும் முதல்வர் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது ஆறுதலாக உள்ளது. கோபியில் கட்டப்படும் இந்த கட்டடம், தத்துவார்த்த பயிற்சிக்காக, நுாலக வசதியுடன் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.