உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மயானம் வேண்டி சடலத்துடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்

மயானம் வேண்டி சடலத்துடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்

அந்தியூர், நவ. 17-ஆப்பக்கூடல் அருகே மயானம் வேண்டி, பவானி-சத்தியமங்கலம் சாலையில், சடலத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே ஓரிச்சேரிபுதுார், காமராஜர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மயான வசதி இல்லாததால், பவானி ஆற்றங்கரையில் உடல்களை அடக்கம் செய்தும், எரியூட்டியும் வந்துள்ளனர். பின் மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆதித்திராவிடர் நலத்துறை சார்பில், அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், 10 ஹெக்டேர் பரப்பளவில், மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும், மயானம் வருவதற்கு அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கருப்பாயி, 60, என்பவர் நேற்று இறந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கேட்டு அவரது உறவினர்கள், பொதுமக்கள் ஓரிச்சேரியில், பவானி--சத்திய மங்கலம் சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், பவானி தாசில்தார் சித்ரா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கு உடன்படாத மக்கள், அரசு ஒதுக்கிய இடத்தில் மயானம் ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்றனர். மழையையும் பொருட்படுத்தாமல், கருப்பாயி உடலுடன் நனைந்தபடியே மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மயானம் செல்வதற்கு முறையான பாதை வசதி செய்து கொடுத்த பின், மயானம் ஏற்படுத்தி தருகிறோம் என, வருவாய்த் துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள், கருப்பாயின் உடலை பவானி ஆற்றங்கரையோரம் அடக்கம் செய்தனர். இறந்தவரின் உடலுடன், 3 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி