| ADDED : மே 30, 2024 06:18 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 28 பள்ளிகளில் சேர்த்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 19 தொடக்கப்பள்ளி, 6 நடுநிலைப்பள்ளி, 3 உயர்நிலைப்பள்ளி என மொத்தமாக 28 பள்ளிகளில் வரும் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத முன்னுரிமையும், 6 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் 7.5 சதவீத முன்னுரிமையும், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்க அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.இது போன்று பல்வேறு நலத்திட்டங்கள், உதவித்தொகைகளை அரசு வழங்கிவருகிறது.எனவே, பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்த்து, அரசு நலத்திட்ட உதவியுடன் இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.