| ADDED : ஆக 21, 2024 06:58 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதைய நிலைகள் குறித்து எஸ்.பி., கேட்டறிந்தார்.தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.பின், கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 17 போலீசாரை பாராட்டி, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி.,க்கள் தேவராஜ், ஜெயபாலன் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.