| ADDED : ஜூலை 04, 2024 10:07 PM
ரிஷிவந்தியம் : பாசாரில் குடிநீர் வழங்காததை கண்டித்து, அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில், கிழக்கு தெரு பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. இது குறித்து பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் பிரச்னையை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், பாசார் மெயின்ரோட்டில் நேற்று காலை 6:45 மணியளவில், அந்த வழியாக வந்த பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஊராட்சி தலைவர் அனுஜா பழனி, ஊராட்சி செயலாளர் சுப்ரமணியன், ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, காலை 7:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.