| ADDED : ஜூன் 20, 2024 09:18 PM
கள்ளக்குறிச்சி: இறந்தவர்கள் குடும்பத்தினர் 29 பேருக்கு அமைச்சர் உதயநிதி தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார். கள்ளக்குறிச்சியில், விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கருணாபுரம் டேனிஷ்மிஷன் பள்ளியில் நடந்தது. அமைச்சர் உதயநிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 29 பேருக்கு தலா ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் வேலு, சுப்ரமணியன், மாவட்ட செயலாளர்கள் வசந்தம்கார்த்திகேயன், உதயசூரியன், கலெக்டர், போலீசார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, அமைச்சர் வேலு மட்டுமே பேட்டி அளித்தார்.
மருந்து டப்பா எடுத்து வந்த உதயநிதி:
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை வழங்கிய அமைச்சர் உதயநிதி, பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இச்சம்பம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் இல்லை என, கூறியதற்காக, மருத்துவமனையில் இருந்த மருந்து டப்பாக்கள் இரண்டை எடுத்து வந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மருந்துகள் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காக உதயநிதி அமைச்சர் வேலுவிடம் கொடுத்தார். அதனை அமைச்சர் வேலு, அரசு மருத்துவமனையில் மருந்துகள் உள்ளது என, காண்பித்தார்.