உளுந்துார்பேட்டை அருகே பட்டாசு வெடித்து வாலிபர் இறந்த வழக்கில் 4 பேர் கைது
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே பட்டாசு வெடித்து ஒருவர் இறந்த வழக்கில் பட்டாசு கடை உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்குப்பம், வேலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 60; இவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பட்டாசு வெடித்தபடி சென்றபோது, பட்டாசு குவியலில் தீ பிடித்து வெடித்ததில் மேளம் வாசித்த உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டுப் பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் மூர்த்தி, 23; சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், அயன்வேலுார் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 50; ராமலிங்கம், 45; கீழ்குப்பம் வேலுார் சிங்காரவேல், 45; பிரகாஷ், 36; அயோத்தி மனைவி ஜெயா, 55; ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து பட்டாசு வாங்கி வெடித்த கீழ்குப்பம் வேலுார் மணிகண்டன், 35; பிரபு, 37; சிவாலியாங்குளம் சேகர் மகன் தர்மா, 27; பட்டாசு கடை உரிமையாளர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், 50; ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.