உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒரே பதிவெண்ணில் 4 ஆம்னி பஸ்கள்; ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அதிர்ச்சி

ஒரே பதிவெண்ணில் 4 ஆம்னி பஸ்கள்; ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அதிர்ச்சி

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஒரே பதிவெண்ணில், நான்கு ஆம்னி சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில், பல ஆம்னி சொகுசு பஸ்கள் வரி செலுத்தாமலும், ஒரே பதிவெண்ணில் பல பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதனையொட்டி, வட்டார போக்குவரத்து துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் நேற்று காலை 11:00 மணியளவில் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது, மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற பிஒய்.05.ஜெ.3485 பதிவெண் மற்றும் வரதன் என்ற பெயர் கொண்ட ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது.டோல்கேட் பூத்தில் ஆய்வு செய்தபோது, இதே பதிவெண்ணில் 4 ஆம்னி சொகுசு பஸ்கள் உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியே கடந்து சென்றது 'பாஸ்டேக்' மூலம் தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர், ஆம்னி பஸ்சில் வந்த பயணிகளை இறக்கி, மாற்று பஸ்சில் அனுப்பி வைத்த பின், பஸ்சை பறிமுதல் செய்தார். இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் கூறுகையில், 'ஒரே பதிவெண்ணில் இயக்கிய 4 தனியார் சொகுசு பஸ் உரிமையாளர் புதுச்சேரியை சேர்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த உள்ளோம். அவர் மீது ஒரே பதிவெண்ணில் 4 பஸ்சுகளை இயக்கி, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை