தமிழ் இலக்கிய திறனறி தேர்வு 5,902 மாணவர்கள் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வில், 5,902 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 மையங்களில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நேற்று நடந்தது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக, தமிழில் உள்ள இலக்கிய திறனை மேம்படுத்தி கொள்ளும் நோக்கில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகையை அரசு செலுத்துகிறது. மாவட்டத்தைச் சேர்ந்த 6,149 மாணவ, மாணவிகள் இத்தேர்வெழுத விண்ணப்பித்தனர். இதில், 247 மாணவ, மாணவிகள் தேர்வெழுத வரவில்லை. மீதமுள்ள 5,902 மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை சி.இ.ஓ., கார்த்திகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.