முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்; கள்ளக்குறிச்சியில் எம் . பி ., துவக்கிவைப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உள்ள டேனிஷ்மிஷன் தொடக்கப்பள்ளியில் நடந்த முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் எம்.பி., டி.ஆர்.ஓ., பங்கேற்றனர். கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷ்னர் சரவணன், நகராட்சி துணை சேர்மன் ஷமீம்பானு அப்துல்ரசாக், தாசில்தார் பசுபதி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேற்று விரிவாக்கம் செய்து திட்டத்தை துவக்கிவைத்தார். கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஏற்கனவே 10 அரசு துவக்கபள்ளிகளில் பயிலும் 695 மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி, கள்ளக்குறிச்சி டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி ரோமன் கத்தோலிக்க நடுநிலைப்பள்ளி ஆகிய 3 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 -5ம் வகுப்பு வரை பயிலும் 172 மாணவர்கள் பயன்பெறுவர்.