நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டர் பிரசாந்த் உத்தரவு
கள்ளக்குறிச்சி: நீர் நிலை மற்றும் புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் நிலை மற்றும் இதர புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் இதர புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீதிமன்ற உத்தரவின்படி நிலுவையில் உள்ளவை குறித்தும், அதன்மீது மேற்கொள்ளள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் தனி நபர்கள் அளித்த மனுக்களின் மீதான நடவடிக்கை, நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. வருவாய்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் எஸ்.பி.,மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.