விவசாயிகளின் விளைபொருட்கள் விற்பனை ரூ.40.53 கோடி: கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் சாதனை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் கடந்தாண்டு ரூ.40.53 கோடி மதிப்பில் விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் விற்பனையாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. வேளாண் பயிர்களுக்கு இணையாக காய்கறிகள், பழவகைகள் கொண்ட தோட்டக்கலை பயிர்களும் அதிளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கீரைகள், அவரை, வெண்டை போன்ற பசுமை காய்கறிகளும் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கள்ளக்குறிச்சி உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு 90 கடைகள், 60 தரை கடைகள் உள்ளது. 550 விவசாயிகள் பதிவு செய்து தாங்கள் பயிரிட்ட காய்கறி உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களை நாள்தோறும் எடுத்து வருகின்றனர்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான விவசாயிகள் அரசு பஸ்களில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அத்துடன் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் வெளிசந்தைகளில் இருந்து கேரட், பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி, பழங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நேரடி உணவு பொருட்கள் விற்பனை அங்காடியும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஜன.1 முதல் டிச.31-ம் தேதி வரை 7 ஆயிரத்து 160 டன் பசுமை காய்கறிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் 657 டன் வெளி காய்கறிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 817 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 15 லட்சத்து 28 ஆயிரத்து 563 நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர். உழவர் சந்தையில் கடந்தாண்டு ரூ.40 கோடியே 53 லட்சத்துக்கு விற்பனையாகி நடந்துள்ளது. வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர் பிரேமா மேற்பார்வையில் சந்தை நிர்வாக அலுவலர் இசைச்செல்வன், உதவி வேளாண் அலுவலர்கள் இளவரசன், குமரேசன் ஆகியோர் உழவர் சந்தையை நிர்வகித்து வருகின்றனர். பார்க்கிங் வசதி தேவை
உழவர் சந்தைக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவற்கு போதிய வசதியின்மையால் சாலையோரங்களிலேயே நிறுத்திவிடுகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் நீண்ட வரிசையில் காய்கறி கடைகள், தள்ளு வண்டிகளில் வியாபாரம் நடக்கிறது. இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. உழவர் சந்தை இயங்கும் நேரங்களில் சாலையை எளிதாக கடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. உழவர் சந்தைக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.