உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை சாத்தனுார் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

 வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை சாத்தனுார் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

திருக்கோவிலுார்: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி, 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 116.4 அடி, 6,722 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,180 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,450 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், வரும் 28ம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு சாத்தனுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 10:00 மணி அளவில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,500 கன அடியாக உயர்த்தப்பட்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவினை பொருத்தும், அணைக்கான நீர் வரத்தின் அளவுக்கு ஏற்ப அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் இறங்க கூடாது : கலெக்டர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு; இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தனுார் அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளான வாணாபுரம், திருக்கோவிலுார் வட்டங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்பு, எச்சரிக்கையுடனும் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை குளிக்க வைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது. இது குறித்து கிராமங்கள் தோறும் அறிவிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ