குடிநீர் வராததை கண்டித்து எலவனாசூர்கோட்டையில் மறியல்
உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை கிராமத்தில் சரிவர குடிநீர் விநியோகிக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் திருச்சி - வேலுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்துார்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை ஊராட்சியில் கடந்த சில தினங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், குடிநீர் வராதது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து, நேற்று காலை திருச்சி - வேலுார் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அசோகன் மற்றும் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்னை தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.