கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி: உரக்கடையின் பூட்டை உடைத்து டிராவில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த திருக்கனங்கூரை சேர்ந்தவர் பெரியான் மகன் பெருமாள்,48; இவர் ரோடுமாமாந்துார் பகுதியில் உரக்கடை வைத்துள்ளார். பெருமாள் கடந்த 8ம் தேதி இரவு 7.45 மணியளவில் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கடைக்கு வந்த போது, கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு பெருமாள் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, கடைக்குள் சென்று பார்த்த போது டிராவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது.இதையடுத்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.